செம்பி இசை வெளியீட்டு விழா உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் கோலகலமாக நடைபெற்றது 

78

 

செம்பி இசை வெளியீட்டு விழா

Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது 

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது

கோவைசரளாவை அக்கா, அம்மா என்று கூப்பிடுகிறார்கள், நான் என்ன சொல்வது என தெரியவில்லை. சரளா பாப்பாவை எனக்கு நன்றாக தெரியும். இதில் நன்றாக நடித்துள்ளார். எட்டு வயது பாப்பாவும் தயக்கமில்லாமல் நடித்துள்ளார். பலருக்கு இது வராது. கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை சிரிப்பு எதுவும் வராது. என்னையே திட்டியிருக்கிறார்கள். நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டியிருக்கிறார்கள். என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என சொன்னார்கள். ஆனால் இப்போது அதை கொண்டாடுகிறார்கள் அதைக்கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் பெரிய படமா சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில் தான் இருக்கிறது. இப்போது 16 வயதினிலே படத்தை பேசுகிறார்கள், அது தான் பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம் எனக்கேட்டால் அது பெரிய படம் இல்லை. கொடைக்கானலில் மிக நல்ல லொகேஷன்களில் எடுத்திருக்கிறார். நான் படம் பார்த்து விட்டேன். தப்பு நடக்கும்போது நாம் கேள்வி கேட்க தயங்குவதை தைரியமாக பேசியுள்ளதென்பதால் எனக்கு மிகவும் பிடித்த படம். ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும் படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போது தான் சினிமா வளரும். நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள், அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். கற்றுக்கொள்ள தயாராக இருங்கள். அஷ்வின் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா அசால்ட்டாக நடித்திருக்கிறார். நான் ரசித்து பார்த்தேன். நாஞ்சில் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. கேமரா மிக அற்புதமாக இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துகள். நல்ல படம் வெற்றிப்படம் என்பதை ரசிகர்களே முடிவு செய்வார்கள். செம்பி மிகப்பெரிய வெற்றி பெறும், வாழ்த்துகள்.

இயக்குநர் பிரபு சாலமன் பேசியதாவது

படத்தில் என்னுடன் தோள் கொடுத்து உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் பெரும் நன்றி. உங்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. இந்தப்படத்தின் பாத்திரத்திற்காக பல காலம் அலைந்திருக்கிறேன். கொடைக்கானலில் இருந்து கொல்லிமலை வரை பலரை தேடினோம் இறுதியில் கமல் சாரின் சதிலீலாவதி ஞாபகம் வந்தது, உடனே கோவை சரளா மேடமை பார்த்து கதை சொன்னேன். என்னால் முடியுமா என்றார்கள், உங்களால் கண்டிப்பாக முடியும் என்றேன் படத்தில் அசத்திவிட்டார். இந்தப் படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படத்திற்கு இசையால் உயிர் கொடுத்த நிவாஸுக்கு நன்றி. ரசிகனின் ரசனையை உயர்த்துகிற கமல் சார் இங்கு வாழ்த்தியது எனக்கு பெருமை. எல்லோருக்கும் நன்றி.

நடிகை கோவை சரளா பேசியதாவது.

இந்தப்படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதை கேட்டு அதை செய்தால் மட்டும் போதும், பிரமாதமாக வந்துவிடும். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து பெருமக்களுக்கும் என் நன்றிகள்.