“Paris Cafe” Movie Review – “பாரிஸ் கஃபே” திரைவிமர்சனம்

அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், சமூக சேவகியான அனுமோலும் சிறந்த தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர். பாரிஸில் ஒரு காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடையும் குரு, அந்த ஜோடியின் மரணம் குறித்து மனைவியிடம் கூற, அதனால் ஏற்படும் பிரிவும், குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க மகள் மேற்கொள்ளும் முயற்சிகளும் ‘பாரிஸ் கஃபே’ படத்தின் கதையாக அமைந்துள்ளன.

ஆணவப் படுகொலை என்ற சமூகப் பிரச்சனையை நேரடியாக பிரசாரம் செய்யாமல், காதல் மற்றும் குடும்ப உறவுகளுடன் இணைத்து சொல்லியிருப்பது படத்தின் முக்கிய பலம். குரு சோமசுந்தரம், அனுமோல் இருவரும் இயல்பான நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கிறார்கள். குறிப்பாக, கணவரின் செயலால் அதிர்ச்சியடைந்து பிரியும் அனுமோலின் கதாபாத்திரம் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளது.

விஜய் விஷ்வா, அர்ச்சனா ஆகியோரின் இளமைத் துள்ளலான நடிப்பும், சாய் விக்கி – நயனா சாய் ஜோடியின் உணர்ச்சிகரமான நடிப்பும் கவனம் பெறுகின்றன. சதீஷ்.ஜியின் ஒளிப்பதிவு, கே-வின் இசை மற்றும் வி.ஜே.சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு தேவையான ஆதரவை வழங்குகின்றன.

 

சமூகப் பிரச்சனையை மையமாக கொண்ட கதையாக இருந்தாலும், சில இடங்களில் திரைக்கதை இன்னும் அழுத்தமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கலாம். இருப்பினும், காதல், குடும்பம் மற்றும் சமூக அக்கறையை கலந்து இயக்குநர் சரஜ் சீலன் சொல்லியிருக்கும் விதம் படத்தை கவனிக்க வைக்கிறது.

‘பாரிஸ் கஃபே’ – காதலுக்குள் ஒரு சமூகக் குரல்

Comments (0)
Add Comment